ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வி.வி. எஸ்.லட்சுமணன் முக்கிய பங்கு வகித்தார். இஷாந்த் சர்மா அவருக்கு உறுதுணையாக இருந்தார். வெற்றிக்கான இலக்கு 216 ரன் என்ற நிலையில் ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. இதனால் இந்தியா தோல்வி அடைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
9-வது விக்கெட்டான லட்சுமண்-இஷாந்த் சர்மா ஜோடி 81 ரன் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 12 ரன் தேவைப்பட்ட போது இஷாந்த் சர்மா “அவுட்” ஆனார். கடைசி விக்கெட்டான ஒஜாவுடன் இணைந்து லட்சுமண் அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 79 பந்தில் 73 ரன் (8 பவுண்டரி) அடித்தார்.
கொல்கத்தாவில் 2001-ம் ஆண்டு இந்தியா “பாலோஆன்” ஆகி ஆடி தோல்வி நிலையில் இருந்தது. அப்போது லட்சுமண் 281 ரன் குவித்து தோல்வியில் இருந்து அணியை மீட்டு வெற்றி பெற வைத்தார். அப்போது டிராவிட் உறுதுணையாக இருந்து செஞ்சூரி அடித்தார்.
அது போன்ற சிறப்பான ஆட்டத்தை லட்சுமண் மொகாலி டெஸ்டில் வெளிப்படுத்தினார். முதுகு வலியோடு அவர் சிறப்பாக ஆடினார்.
இந்த வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-
இந்த டெஸ்டில் லட்சுமணின் ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆகும். பேட்டிங் வரிசை முற்றிலுமாக சரிந்த நிலையில் அவர் உதவியாக இருந்தார். இஷாந்த்சர்மா அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து பாண்டிங் கூறியதாவது:-
2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஏற்பட்ட தோல்வியை விட இந்த தோல்வி அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் விளையாடிய டெஸ்டில் இது தான் மிகவும் பரபரப்பானது. எனது வீரர்களிடம் லட்சுமண் விக்கெட் தான் முக்கியம் என்று கூறினேன். அதற்கு ஏற்றவாறு அவர்தான் சிறப்பாக விளையாடி எங்களது வெற்றியை பறித்து விட்டார்.
இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். 90 முதல் 100 பந்துகள் வீசியும் கூட இஷாந்த் சர்மாவை அவுட் செய்ய முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. என்னை பொறுத்தவரை ஆட்ட நாயகனுக்கு பொருத்த மானவர் லட்சுமண்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டெஸ்டில் 8 விக்கெட் கைப்பற்றிய ஜாகீர்கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.