இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சுற்றுப்போட்டிகளிலிருந்து கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளை இந்திய கிரிக்கெட்சபை (பி.சி.சி.ஐ.) இன்று நீக்கியுள்ளது.
அங்கத்துவ உடன்படிக்கைகளை மீறிய குற்றச்சாட்டின் காரணமாக இந்திய கிரிக்கெட் சபை இந்த அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதனால் அடுத்த வரும் நடைபெறவுள்ள ஐ.பி.எல். சுற்றுப்போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்குபற்ற முடியாது. எனினும் இத்தீர்மானத்திற்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஆயத்தமாகும் நிலையில் இவ்விவகாரம் பல தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, புதிதாக உருவாக்கப்பட்ட கொச்சி அணி 10 நாட்களுக்குள் தமது உட்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு குமார் சங்ககாரவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஷேன் வோர்னும் தலைவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்திய கிரிக்கெட் சபையின் இத்தீர்மானம் தமக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். 'இந்திய கிரிக்கெட் சபை ஏனைய அணிகளை இவ்வாறு அச்சுறுத்தினால் ஐ.பி.எல்.லின் நான்காவது தொடர் நடைபெறுவது சந்தேகம். நாம் சட்டநடவடிக்கை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த உடன்படிக்கை இரத்து குறித்த தீர்ப்பின் பிரதியை நாம் எதிர்பார்த்திருக்கிறோம்' என அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளை நீக்கியதால் ஐ.பி.எல். போட்டிகளின் பெறுமானம் குறையாது எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சஷாங்க் மனோகர், இவ்விரு அணிகளுக்குப் பதிலாக புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லலித் மோடியின் குடும்பத்திற்கு ராஜஸ்தான் ரோயல் அணியுடன் தொடர்புள்ளது. எனினும் தவறுகள் எதுவும் இடம்பெறவில்லை என லலித் மோடி கூறியுள்ளார். அதேவேளை மேற்படி இருஅணிகளை நீக்கும் தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் லலித் மோடி கூறியுள்ளார்.
அத்துடன் இத்தீர்மானத்துடன் லலித் மோடிக்கு தொடர்பில்லை என இந்திய கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
ஐ.பி.எல்.லின் நான்காவது தொடர் 10 அணிகள் கொண்ட சுற்றுப்போட்டியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.