காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 5 தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
டெல்லியில் 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் ஜோடி தங்கம் வென்றது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிசா சயீத், ராஹி சர்னோபாத் ஜோடி தங்கம் வென்றது. இதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2வது தங்க பதக்கத்தை தட்டி சென்றுள்ளது.
மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர சிங் 60 கிலோ எடை கிரிக்கோ ரோமன் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மல்யுத்த போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது. மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சஞ்சய் 74 கிலோ எடை கிரேக்கோ ரோமன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அணில் குமார் 96 கிலோ எடை கிரேக்கோ ரோமன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இதுவரை இந்தியா 5 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.