சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.
சிவகாசியில் இந்த ஆண்டு அடுத்தடுத்த வந்த சோதனைகளால் பட்டாசு விற்பனை முடங்கியது. வடமாநிலங்களில் பட்டாசுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதையடுத்து கடந்த 15 நாட்களாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 80 சதவிகித பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 சதவிகித பட்டாசுகளை இன்னும் 3 நாட்களில் அனுப்பி வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உள்ளூர் விற்பனை ஆயுதபூஜை நாளில் இருந்து தொடங்கியது. தமிழகத்தில் தீபாவளி விற்பனைக்காக 6 ஆயிரம் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சிவகாசியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் பல்வேறு வெடிகள் இருக்கும் கிப்ட் பாக்ஸ் ரகங்களுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் குருவி வெடி, லட்சுமி வெடி, சரவெடி ஆகியவை இருப்பில் இல்லை.
கிப்ட் பாக்சில் இந்த ரக வெடிகள் கண்டிப்பாக இருக்கும். எனவே, வியாபாரிகள் இந்த ரக வெடிகள் வைத்திருப்பவர்களிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் பட்டாசுகளின் விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வேறு வழி இல்லாததால் பொறுத்துக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.