சட்டசபை தேர்தல் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு, வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி மே மாதம் முதலில் தேர்தல் நடந்தால், அதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிடும். ஓட்டுச்சாவடி மையங்கள், பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை, முன்னதாக துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக, மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வுதுவங்கி, 25ம் தேதிவரைநடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல் 10ம்தேதி வரை நடை பெறும்.தேர்தல் காரணமாக, பிப்ரவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வுகளை துவக்கி, மார்ச் 20க்குள் முடிக்கவும், பத்தாம் வகுப்பு தேர்வுகளை மார்ச் 20க்கு பிறகு துவக்கி, மார்ச் 31க்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளும் ஜனவரி இறுதியில் துவக்கி, பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் முடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, அதிகாரிகள் கருதுகின்றனர்.
இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி, பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து தேர்வுத்துறைஎந்தவித ஆலோசனையையும் நடத்தவில்லை. சட்டசபை தேர்தல் காரணமாக, 10 , 15 நாட்கள் முன்கூட்டியே தேர்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டால், அதற்கு தகுந்தபடி, தேர்வுப் பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றவும் தயாராக உள்ளோம். ஆனால், இதுவரை அரசுத் தரப்பில் இருந்து, எந்தவிதமானதகவலும் வரவில்லை.இவ்வாறு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.