மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கிறிஸ் கெய்ல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டேரன் சமி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து மீட்டெடுத்து, அணியை புத்தாக்கம் செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு டேரன் சமி தலைமை தாங்குவார் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றார் கெயில். அவரது தலைமையில் அந்த அணி சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், பெரும்பாலான போட்டிகளில் தோல்வியையேத் தழுவியது.
கெயில் தலைமையில் விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில், 3ல் மட்டுமே அந்த அணி வெற்றி அடைந்துள்ளது. மேலும், டெஸ்ட் தரவரிசையில் 7வது இடத்துக்கும், ஒரு நாள் போட்டி தரவரிசையில் 8வது இடத்துக்கும் அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கெயில், போலார்டு, பிராவோ ஆகியோர் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.
தாங்கள் விளையாடும்காலம் முழுவதும் இந்த வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நீடிக்கவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். கெயிலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டேரன் சமி 2007ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை எட்டு டெஸ்டில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளவர்.
அணி இப்போதுள்ள நிலையிலிருந்து மீண்டுவர ஒரு புதிய தலைமை தேவை. அந்த இடத்தை டேரன் சமி நிச்சயம் நிரப்புவார் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி எர்னஸ்ட் ஹிலைரே தெரிவித்தார்.
அதே சமயம், இக்கட்டான சூழ்நிலையில் அணியை வழிநடத்தியமைக்கு கெயிலுக்கு, எர்னஸ்ட் பாராட்டு தெரிவித்தார்.
துணை கேப்டன் பொறுப்பு பிராவோவிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரென்டன் நாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய டெஸ்ட் அணியில் கெயில், பிராவோ ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.