இன்று இடம்பெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத வெற்றி பெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் 108 ரன்களுக்கு ஆரம்ப நான்கு விக்கெட்டுக்களையும் இழந்திருந்த இந்திய அணி, யூசஃப் பதான், ஷர்மா ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டத்தில் 316 என்ற கடினமான இலக்கை வெற்றி கொண்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இப்போட்டியிலாவது வெற்றி பெறவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடியது ஆரம்பத்திலேயே தெரிந்தது. மெக்குலம், டெய்லர், ஸ்டைரிஷ், என மூவர் 40 ற்கு மேல் ரன்களை பெற்றுக்கொள்ள, பிராங்க்லின் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 98 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்ஸர்களும், 12 பவுன்றிகளும் அடங்கும்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 315 ரன்களை எடுத்தது. இது கடினமான இலக்கு என்றாலும் பெங்களூர் போட்டியென்பதால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படியும் பூர்த்தி செய்ய வேண்டுமென இந்தியாவும் முடிவெடுத்தது.
தொடர்ந்து கடந்த இரு போட்டிகளும் சதமடித்த கம்பீர் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே 27 ரன்களுடன் அவுட்டாக, பட்டில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
108 ரன்களுக்குள் முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்தது இந்தியா. 188 ரன்கள் பெற்றிருந்த வேளை ஷர்மாவும் 44 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
களத்தில் யூசஃப் பதான், திவாரி விடாமல் முயன்றனர். பதான் 96 பந்துகளில் 7 பவுன்றிகள், 7 சிக்ஸர்கள் அடங்களாக 123 ரன்களை அதிரடியாக பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் 48.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது இந்தியா.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி வருகிற 10 ம் திகதி சென்னையில் நடக்கிறது.
இதேவேளை ஆஷஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் அஸி. 245 ரன்களையும் இங்கிலாந்து 620 ரன்களையும் எடுத்தது. இங்கிலாந்து இன்னிங்சில் கூக் 148 ரன்களையும் பீட்டர்சன் 227 ரன்களையும் எடுத்தனர்.
எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் அஸி, 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.